தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, November 26, 2017

26-11-2017
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 
ஒப்புதல் பெற்ற நாள்: 1949 நவம்பர் 26
 புது டில்லியின் அரசியல் நிர்ணய சபை மண்டப அரங்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முழு வடிவத்தில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கையெழுத்திடுகிறார்.

1950 ஜனவரி 24 அன்று இந்தியாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில்  அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கையெழுத்திடுகிறார்கள். படத்தில் சர்தார் வல்லபபாய்படேல், தொழிலாளர் துறை அமைச்சர் ஜெகஜீவன்ராம் உள்ளிட்டோர்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியும் சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துபூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று தலைசிறந்த இடதுசாரிச் சிந்தனையாளர் எம்.என். ராய் முதன்முதலாக 1934-ல் குரல் கொடுத்தார். அவருடைய யோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1935-ல் அதையே தீர்மானமாக நிறைவேற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசும் அந்த யோசனையை ஏற்றது. கவர்னர் ஜெனரல் லின்லித்கோ பிரபு தலைமையிலான தேசிய நிர்வாகக் கவுன்சில் இதற்காக விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே பூர்வாங்க வேலைகள் தொடங்கின.
நிர்ணய சபை
அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான அரசியல்சட்ட நிர்ணய சபை 9.12.1946-ல் முதல்முறையாகக் கூடியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில்தான் அரசியல் சட்ட நிர்ணய சபை கூடியது. இந்தச் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததாலும், சில சமஸ்தானங்கள் உறுப்பினர் தகுதியை இழந்ததாலும் இந்தியப் பகுதிக்கான அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது. இவற்றுள் 207 உறுப்பினர்கள் பல்வேறு மாகாண சட்டசபைகளிலிருந்து பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுதேச சமஸ்தானங்கள் 93 பிரதிநிதிகளை அனுப்பின. 4 பிரதான மாகாணங்களிலிருந்து 4 பேர் சேர்க்கப்பட்டனர்.
13.2.1946-ல் இந்த சபைக்கான நோக்கங்களைத் தெரிவிக்கும் தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்தார். 22.1.1947-ல் இந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. 14.8.1947-ல் இந்த சபை கூடி, சட்டத்தை வகுக்கும் பணியைத் தொடங்கியது. 29.8.1947-ல் அரசியல் சட்டத்தை வகுக்கும் குழு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு முதலில் சச்சிதானந்த சின்ஹா தலைவரானார். பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். ஹரேந்திர குமார் முகர்ஜி என்ற வங்காள கிறிஸ்தவர் துணைத் தலைவரானார்.
இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணி செய்தது. பாபு ராஜேந்திர பிரசாத் 4 குழுக்களுக்குத் தலைவராக இருந்தார். நிர்ணய சபைக்கான விதிகளை வகுக்கும் குழு, வழிகாட்டும் குழு, நிர்ணய சபைக்காகும் நிதியை நிர்வகித்தல், ஊழியர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கான குழு, தேசியக் குடியைத் தேர்வுசெய்யும் குழு ஆகியவற்றுக்கு அவர் தலைவராகத் திகழ்ந்தார்.
தலைவர் அம்பேத்கர்
மாநிலங்களின் சட்டங்களுக்கான குழு, மத்திய அரசின் அதிகாரங் களையும் கடமைகளையும் வகுக்கும் குழு, மத்திய அரசின் அரசியல் சட்டங்களைத் தெரிவு செய்யும் குழு ஆகியவற்றுக்கு ஜவாஹர் லால் நேருவே தலைவராக இருந்தார். அடிப்படை உரிமைகள், சிறுபான்மை யினர், பழங்குடிகள் உரிமை, விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்குத் தலைவர், உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல். ஒட்டுமொத்தமான அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
இந்த அரசியல்சட்ட நிர்ணய சபை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்களுக்குப் பணி செய்தது. 11 தொடர்களாகக் கூட்டங்கள் நடந்தன. மொத்தம் 165 நாட்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பான பிரதான விவாதங்களுக்கும் திருத்தத் தீர்மானங்களுக்கும் செலவிடப்பட்டது. மொத்தம் 7,635 திருத்தத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் 2,473 விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடை முறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் சட்டங்களின் சில அம்சங்களும் தேவைக்கேற்பச் சேர்க்கப்பட்டன.
சமத்துவ, மதச்சார்பற்ற…
இந்திய அரசியல் சட்டத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 12 அட்ட வணைகள் இடம்பெற்றன. இந்திய அரசியல் சட்டம் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் இயற்றப்பட்டிருக்கிறது.
“இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” என்று இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டைப் பற்றிக் கூறிக்கொள்கிறது. அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம். 1976-ல் இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலமாகத்தான் நம்முடைய அரசியல் சட்டத்தின் முகப்பு வாசகத்தில் ‘சோஷலிச, மதச்சார்பற்ற’ என்ற 2 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. 26.11.1949-ல் அரசியல் சட்டம் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. சபையின் 284 உறுப்பினர்கள் 24.1.1950-ல் அதில் கையெழுத்திட்டார்கள்.
26.1.1950-ல் புதிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தேசிய சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிந்து, அதுவே நாடாளுமன்றமாக மாறியது. 1952-ல் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றம் உருவானது.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ முக்கியமான காரணம், நம்முடைய அரசியல் சட்டம்தான். மகத்தான மானுட ஆவணம் என்று அழைக்கப்படும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்ட’த்தின் உருவாக்கத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் போராட்டங்கள், தவிப்புகள், மகத்தான தலைவர்களின் கனவுகள், தியாகங்கள் எல்லாமே இருக்கின்றன. நள்ளிரவில் சுதந்திர நடையை ஆரம்பித்த நம் தேசத்துக்கு, வெளிச்சத்தைத் தந்தது நமது அரசியலமைப்புச் சட்டமே. அது ஏற்கப்பட்ட இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.
ஒட்டுமொத்த இந்தியாவா, இந்தி இந்தியாவா?
இந்தி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி எழுப்பிய குரல் மிகவும் முக்கியமானது: “ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் படிக்குமாறு கட்டாயப்படுத்தியதால் ஆங்கிலத்தை வெறுத்தோம்; இந்தியைப் படித்துத்தான் தீர வேண்டுமென்றால், படிக்கும் வயதைக் கடந்துவிட்ட என்னால் படிக்க முடியாது. நீங்கள் எனக்குத் தரும் நெருக்கடியாலும் படிக்க முடியாது. வலுவான மத்திய அரசு வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அந்த மத்திய அரசு மக்களை அடிமைப்படுத்தி தேசிய மொழியைப் படிக்குமாறு கட்டாயப்படுத்தும் என்றும் அஞ்சுகிறோம். ஏற்கெனவே, தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ஐக்கிய மாகாண நண்பர்கள் வலியுறுத்துவது நாட்டின் ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் உதவாது. ஒட்டுமொத்த இந்தியா வேண்டுமா, இந்தி இந்தியா வேண்டுமா என்பதை அவர்கள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.”
பக்கம்பக்கமாய்…
இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபைக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள் 11 பெரிய தொகுப்புகளாக அச்சிடப்பட்டுள்ளன. இவற்றில் சில 1,000 பக்கங்களுக்கும் மேல் கொண்டவை.
தனி சோபை
காந்தி குல்லாய்களும் நேரு பாணி சட்டைகளும் நிறைந்த அவையில் 9 பெண்கள் இடம்பெற்றிருந்தது அவைக்குத் தனி சோபையைத் தந்தது என்று ஒரு தேசிய நாளிதழ் வர்ணித்திருந்தது. காலம்காலமாகப் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்திருந்த இந்திய சமூகத்தில் இது பெரும் புரட்சி!
காந்தியும் அம்பேத்கரும்
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கருடன் குழு உறுப்பினர்கள்.
மிகக் குறுகிய காலமே சட்ட அமைச்ச ராகப் பணியாற்றினாலும், சுதந்திர இந்தியாவின் சட்டப் பாதைக்கு மகத்தான வழிகாட்டியவர் அம்பேத்கர். சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் அமைச்சரவைப் பட்டியல் காந்தியின் பார்வைக்குப் போனபோது அதில் அம்பேத்கர் பெயர் இல்லை. அப்போது “சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத் திருக்கிறது. காங்கிரஸுக்கு அல்ல” என்றார் காந்தி. சட்ட அமைச்சராக அம்பேத்கர் பெயர் இடம்பெற்றது.
இங்கிலீஷ் பேண்டு
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விமர்சகர்களும் உண்டு. கிராமம், நகரம் இரண்டில் இந்தியா எதை அடிப்படையாகக்கொள்வது என்ற கேள்வி அப்போது எழுந்தது. கிராமமா, நகரமா என்பதைவிட, தனிநபரை அடிப்படையாக வைத்தே சட்டங்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட பிறகு, காந்தியத் தன்மையே இதில் இல்லையே என்று மகாவீர் தியாகி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். “என்னைப் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வீணை அல்லது சிதாரின் ஒலியைத்தான் எதிர்பார்த்தோம், முடிவில் இங்கிலீஷ் பேண்டு அல்லவா ஒலிக்கிறது?” என்று அங்கலாய்த்தார் கே. ஹனுமந்தையா.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR