தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, February 27, 2018

தோழர். A. பன்னீர்செல்வம் TT அவர்கள்  
இம் மாதம் 28-02-2018 அன்று பணி நிறைவு பெறுகிறார்!

27-02-18 அன்று கூத்தாநல்லூரில் சிறப்பான முறையில் பாராட்டு விழா நடைபெற்றது. 
ஊழியர்கள், அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் என்ற வகையில் 100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். 

நமது மாவட்டச் செயலர் 
தோழர். கிள்ளிவளவன், 
TMTCLU மாவட்டச் செயலர் 
தோழர். கலைச்செல்வன், 
மாவட்டத் தலைவர் தோழர். நாடிமுத்து, 
மாநில மகளிரணி தலைவர் 
தோழியர் லைலாபானு, 
ஓய்வு பெற்ற தோழர்கள் 
மன்னை காளிதாஸ், MC,
பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் 
மற்றும் பல தோழர்கள் 
பங்கேற்று வாழ்த்தினர். 




பெரிதும் வருந்துவோம்!


சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும்
 அரசுப் படையினருக்கும் 
இடையே  நடைபெறும் சண்டையில் 
அப்பாவி மக்கள், குழந்தைகள் 
பேரல் குண்டுக்கு பலியாகிற, 
காயப்படுகிற கொடுமை 
பெரிதும் வேதனை அளிக்கிறது. 

சர்வதேசத் சமூகம், ஐக்கிய நாடுகள் சபை 
இவையெல்லாம் எதற்கு இருக்கிறது 
என்றே தெரியவில்லை.

என்ன கொடுமைடா!   சாமி!!

நமக்கு நடந்ததாய் எண்ணுவோம்!
கவலைப்படுவோம், வேதனைப் படுவோம்!!
நாய்களை திட்டித் தீர்ப்போம்!
மனித குலமா இதைச் செய்கிறது என்று வெட்கப்படுவோம்!

SPECIAL CASUAL LEAVE
சிறப்பு தற்செயல் விடுப்பு 

அமிர்தசரஸில்  நடைபெறவிருக்கும் 
அகில இந்திய மாநாட்டுக்குச் 
செல்லும் தோழர்கள் 
கீழ்க்கண்ட கடிதத்தை இணைத்து 
சிறப்பு விடுப்புக்கு விண்ணப்பிக்கவும்.


Monday, February 26, 2018

திருடர்களை ஆலிங்கனம் செய்யும் அன்புப் பிரதமர்

ஒரு மனிதனின் குண இயல்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் சகவாசம் வைத்திருக்கும் நண்பர்களை வைத்தே சொல்லிவிடுவார்கள், அவன் யோக்கியனா இல்லையா என்று. சில பேர் தவிர்க்க இயலாமல் நட்புக்காக சில மோசமான நடத்தை உள்ள நண்பர்களுடன் நட்பைத் தொடர்ந்து பராமரிப்பார்கள். இருந்தும் தன்னளவில் நேர்மையையும், நாணயத்தையும் காப்பாற்றுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இன்னும் சில பேரோ தன்னைச் சுற்றி உள்ள அனைவரும் மிகத் தீவிரமான குற்றக்கும்பலாய் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். அவர்களும் இயல்பிலேயே நேர்மையற்றவர்களாய், மோசடிப் பேர்வழிகளாய் இருப்பார்கள். அது போன்ற நபர்களுக்குத்தான் தன்னை காப்பாற்றிக் கொள்ள பொறுக்கிகள், ரெளடிகளின் துணை எப்பொழுதும் தேவைப்படும். அந்த வகையில் இந்திய நாட்டின் பிரதமரின் நேர்மையையும், நாணயத்தையும் நாம் உரசிப் பார்க்க வேண்டும் என்றால் அவரைச் சுற்றியுள்ள நட்பு வட்டாரத்தை நாம் பரிசீலனை செய்தாலே போதும்.


யார் எல்லாம் மோடியின் நட்பு வட்டாரத்தில் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்று பார்த்தால் அமித்ஷா, ராஜ்நாத்சிங், அம்பானி, அதானி, மல்லையா, லலித் மோடி, இப்போது நாட்டைவிட்டு ஓடிப் போன நீரவ் மோடி என இந்தியாவில் உள்ள முக்கியமான கார்ப்ரேட்டுகளும், காவியிஸ்ட்களும் தான் மோடியின் உற்ற நண்பர்களாய் இருந்து வருகின்றார்கள். மோடி ஏன் இவர்களை எல்லாம் தன்னுடைய நண்பர்களாய் வைத்திருக்கின்றார் என்றால், மோடியும் தன்னளவில் ஒரு கார்ப்ரேட் கைக்கூலியாயும், காவியிஸ்ட்டாகவும் இருப்பதால்தான். மோடியின் ஆடம்பரக் கூட்டங்களுக்கும், தன்னுடைய ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலான பார்ப்பன பாசிசத்தை ஏற்றுக்கொண்ட இந்தியாவை உருவாக்கவும் இவர்கள் மோடிக்கு உதவுவார்கள். பதிலுக்கு மோடி அவர்களுக்கு உதவுவார். அது எந்த மாதிரியான உதவியாக இருந்தாலும் கண்டிப்பாக மோடி செய்வார். போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றாலும் சரி, குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றாலும் சரி, நாட்டின் வளங்களை எல்லாம் அழித்து உங்களது கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொள்ள விரும்பினாலும் சரி, இல்லை நாட்டுமக்களின் பணத்தை எல்லாம் உங்களுடைய சொந்தப் பணமாக நினைத்து சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டு ஓடிவிட விரும்பினாலும் சரி, என்ன வேண்டுமோ அதைத் தைரியமாக மோடியிடம் கேட்க முடியும். அதைச் செய்து கொடுப்பதை தன்னுடைய பிறவிப் பயனாய் கருதி, சிரமேற்கொண்டு மோடி அதைச் செய்து முடிப்பார்.
ஆனால் இது எல்லாம் பொதுமக்களின் பார்வையில் இருந்து மோடியின் செல்வாக்கில்லாமல் நாட்டின் சட்டதிட்டங்கள்படி நேர்மையாகவும், நீதிப்படியும் நடப்பதுபோலவே கட்டியமைக்கப்படும். அவர்கள் நினைத்தால் உங்களை சட்டப்படியே தூக்கிலும் போட முடியும், அவர்களின் நியாயப்படியே சுட்டுக் கொல்லவும் முடியும். அவர்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. இப்போதும் அப்படித்தான். நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11300 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக சிபிஐ சொல்கின்றது. சிபிஐ வழக்குப் பதிவதற்கு ஆறு நாட்களுக்கு முன் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் மோடியுடன் நீரவ் மோடி எடுத்துக் கொண்ட குருப்போட்டோ தற்போது வெளியாகி சந்தி சிரித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் அதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
2011 ஆம் ஆண்டில் இருந்தே இந்த மோசடிகள் நடந்துள்ளதால் இதற்குக் காங்கிரஸ்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் இவர்களால் பேச முடிகின்றது. 'காங்கிரஸ் ஆட்சியிலேயே விபச்சாரம் தொடங்கிவிட்டது, எங்கள் ஆட்சியில் அது எய்ட்ஸாகப் பரிணாமம் அடைந்து விட்டது அவ்வளவுதான். ஆனால் மோடிக்கு உண்மையில் அவர் ஓர் எய்ட்ஸ் நோயாளி என்று தெரியாது. தெரிந்திருந்தால் கட்டிப்பிடித்து கைகுலுக்கி இருக்க மாட்டார், மோடி ஒரு மகா உத்தமர்' என்ற தொனியில்தான் பேசிவருகின்றார்கள்.
இருந்தாலும் நாட்டுமக்கள் மத்தியில் நீரவ் மோடியுடன் நரேந்திர மோடிக்கு கள்ளத் தொடர்பு இருக்குமோ என வலுவான சந்தேகங்கள் எழுந்துவிட்டதால் நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 5100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதன் மூலம் மோடி அரசு யோக்கியர்களுக்காக யோக்கியர்களால் நடத்தப்படும் ஒரு நல் அரசு என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மோடி அரசில் சிபிஐ, என்ஐஏ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, என எல்லாமே மோடிக்குப் புனிதர் பட்டம் கொடுப்பதற்காகவே அல்லும் பகலும் வேலை செய்து கொண்டிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாத ரகசியமல்ல.
எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நீரவ் மோடி நாட்டைவிட்டு ஓடிப் போகவில்லை. அவர் இந்தியாவில் மோடியின் துணையுடன் கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழச் சென்றுள்ளார். நம் லலித் மோடியும், விஜய் மல்லையாவும் இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் இவர்கள் ஒரு ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை வாழவே வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றார்கள். 2017 ஆம் ஆண்டு மட்டும் 7000 மிகப்பெரிய பணக்காரர்கள் இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கின்றார்கள். 2016 ஆண்டு 6000 பேரும், 2015 ஆம் ஆண்டு 4000 பேரும் வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு சொகுசு வாழ்க்கை வாழச் சென்றுவிட்டார்கள். மோடி போன்ற கார்ப்ரேட் கைக்கூலிகளை கையில் போட்டுக் கொண்டு இந்திய மக்களை ஒட்டச்சுரண்டி கொள்ளையடிப்பதும், பிறகு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க வெளிநாடுகளுக்கு வெட்டுக்கிளிகள் போன்று பறந்து ஓடிவிடுவதும் இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்துவரும் ஒரு நிகழ்ச்சிப்போக்குதான். இதைச் செய்து கொடுப்பதுதான் தரகனைவிட மோசமான குணம் படைத்தவர்களின் வேலை.
சாமானிய மக்கள் கடன் கேட்டால் அவர்களை நாயைவிடக் கேவலமாக நடத்தும் வங்கிகள், பணக்காரர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்று மக்களின் பணத்தை வாரிவாரிக் கொடுப்பதும், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிசனாக எடுத்துக்கொண்டு, பணம் கொடுக்கவில்லை என்றால் வாராக்கடன் என்று கணக்குக் காட்டி அதைத் தள்ளுபடி செய்வதையும் கடந்த பல ஆண்டுகளாக ஒரு தொழிலாகவே செய்து வருகின்றன. அரசியல்வாதிகளும் வங்கி அதிகாரிகளும் மிகப்பெரிய அயோக்கியர்கள் என்பதற்கும், வாராக்கடன் என்று அரசு அறிவித்திருக்கும் ஏறக்குறைய 8.5 லட்சம் கோடியில் இவர்களும் கணிசமான தொகையை திருடித் தின்றவர்கள் என்பதற்கும் சாட்சி, கடன் பெற்று திருப்பி கொடுக்காதவர்கள் பெயர்களை பகிரங்கமாக இந்திய மக்களுக்கு இந்த யோக்கியர்கள் தெரிவிக்காததே ஆகும். அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் அதில் மோடியின் நண்பர்கள் மட்டுமே 90 சதவீதத்திற்கு மேல் இருப்பார்கள் என நாம் நம்பலாம்.
மோடியின் ஆட்சி, ஏழைகளே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்களிம் 73 சதவீத பணம் குவிந்திருப்பதாகவும், 67 கோடி ஏழை இந்தியர்களின் வருமானம் கடந்த ஆண்டு வெறும் ஒரு சதவீதம் மட்டுமே உயர்ந்திருப்பதாகவும் சமீபத்தில் ஆக்ஸ்பார்ம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் இந்தியாவில் உள்ள கடைசி ஏழைவரையும் முற்றிலுமாக துடைத்து அழிக்கப்படுவார்கள் என நாம் உறுதியாக நம்பலாம்.
இந்தியாவில் இதுவரை நடந்த அனைத்து ஆட்சிகளுமே கார்ப்ரேட் நலன் காக்க நடந்த ஆட்சிகள் தான். ஆனால் அவர்கள் ஒருபோதும் அதை வெளிப்படையாக மக்களின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தியது கிடையாது. ஆனால் மோடியின் ஆட்சியோ அப்பட்டமாக, பட்டவர்த்தனமாக தன்னைப் பெருமுதலாளிகளின் கைக்கூலி என பிரகடனப்படுத்திக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அவரால் அம்பானியின் விளம்பர மாடலாக தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள முடிகின்றது. பார்ப்பன பாசிசமும், முதலாளித்துவ பாசிசமும் அப்பட்டமாக அம்மணமாக கைகோர்த்து நம்முன் ஆடிக்கொண்டு இருக்கின்றன. அது நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது என சவால் விடுகின்றது. என்ன செய்யப் போகின்றோம்? யாரோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் போகின்றோம்? ஏழைகளை அழித்தொழிக்கும் பொறுக்கிகளோடா? இல்லை ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பேதத்தை ஒழிக்கும் பொதுவுடமைக்காரர்களோடா?
- செ.கார்கி

Saturday, February 24, 2018

சஞ்சார்  பவன் முற்றுகைப் போராட்டம்

மூன்றாவது சம்பளக் குழு அமைக்கக்கோரி  நாம் நடத்திய அடுத்தக் கட்டப் போராட்டம் 
 23-02-2018 அன்று சஞ்சார்பவன் நோக்கிய பேரணி. வெற்றிகரமாக நடந்து முடிந்த 
அந்தப் பேரணியில் தலைவர்கள் எழுச்சியுரையாற்றினர்.   நூற்றுக்கணக்கான தோழர்கள் உணர்வோடு பங்கேற்றனர்.

இன்று  24-02-2018 நமது தலைவர்கள்,
துறை அமைச்சர் மனோஜ் சின்கா அவர்களை சந்தித்து நமது கோரிக்கைகளை முன்னிறுத்தி விவாதித்தார்கள். DOT செயலரும் பேச்சுவார்த்தையில் உடனிருந்தார்.
பரஸ்பரம் நம்பிக்கையூட்டுவதாக பேச்சுவார்த்தை அமைந்திருந்தது.  

மீண்டும் அமைச்சரை நமது கூட்டமைப்பு வருகிற 10-03-2018 அன்று சந்திக்கவிருக்கிறது. 









Friday, February 23, 2018

ஏர்செல் வாடிக்கையாளர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பார்த்த கால்களை பேச முடியவில்லை.
கேஸ், வங்கி போன்ற பல்வேறு கணக்குகளுக்கு இந்த எண் கட்டானதால் பல்வேறு சிரமங்கள் அவர்களுக்கு.
ஏர்செல் எண்களில் இருக்கக்கூடிய இருப்புத் தொகை பறிபோகுதல்,
திடீரென்று கட் ஆனதால் தொடர்பு எண்கள் விபரம் கிடைக்காமை,
இப்படி பல்வேறு நெருக்கடிகளுக்கு ஏர்செல் சந்தாதாரர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அரசுத்துறை நிறுவனமான நமது BSNL க்கு
ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கடமை உள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் நமக்கு கிடைத்திருக்கிறது.
அவற்றை முறைப்படுத்தி சேவையாற்ற முனைவோம்.

1. ஏர்செல் டவர் கிடைக்கும் பகுதியிலுள்ள தோழர்கள் அந்தந்த பகுதிகளை வாட்ஸப், முகநூல், வலைத் தளம் ஆகியவற்றில் வெளியிடுங்கள். ( ஏனெனில் சில இடங்களில் டவர் கிடைப்பத்தாக கேள்வி ).
2. ‎அடுத்து Airtel மூலம் UPC code எடுக்கும் ஒரு முறை:
UPC Code ஐ எடுக்க Network Settings க்கு சென்று Automatic / Manually என்று இருக்கும். இதில் Manually Select செய்து IND AIRTEL 2G ஐ தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் UPC Code ஐ பெறலாம்.
ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் Incoming / Outgoing calls பெற இயலாது. இது UPC Code எடுப்பதற்கான ஒரு மாற்று வழி மட்டுமே.
PORT 9876543210 to 1900 க்கு மட்டுமே SMS செல்லும். UPC Code 24 மணி நேரத்தில் பெறலாம். ஆனால் அனைத்து SMS களையும் Receive செய்து கொள்ளலாம்.
ஏதேனும் இடையூறு ஏற்படின் Mobile ஐ Switch Off செய்து On செய்யவும்.
3. நம்மை நாடி வரும் ஏர்செல் வாடிக்கையாளர்களிடம், கூடுதல் இணைப்பாக எப்போதும் BSNL sim ஒன்று வைத்திருங்கள் என்று கூறி அவர்களிடம் நமது சிம் கார்டை கொடுங்கள். விலை ரூ. பத்தோ அல்லது இலவசமோ இந்த நேரத்தில் நாம் அணுகினால் கண்டிப்பாக வாங்கிக் கொள்வார்கள்.
4. ‎இந்த நேரத்தில் நமது PLAN பற்றிய விபரங்கள் தெளிவாக தெரியும் விதத்தில் குறிப்பிட்டவற்றை மட்டும் எழுதி வைக்கவேண்டும்.
உதாரணமாக....


With data.
Rs. 485
90 days
All networks unlimited
1.5 GB daily.
100 SMS DAILY.

WITH OUT DATA
Rs. 99
26 Days.
All networks unlimited.

இப்படி.... இதை மட்டும் போடுவது.
5. இது சம்பந்தமான விபரங்களை, உபயோகிப்பாளர்களின் சந்தேகங்களை தீர்க்கவல்லவர்கள் கூடுதல் உழைப்பை நல்கிட வேண்டும்.


6. ‎இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள அனைவரும்

கடின உழைப்பைக் கொடுப்போம். 10 மணி பணிக்கு வரும் தோழர்கள் 8 மணிக்கே வருவோம். நெரிசலை ஆட்கொள்ளுவோம்.

7. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை களைய அவர்களிடம் எனது தொலைபேசி எண்ணையும் நீங்கள்

அளிக்கலாம் ( 94861 09185 ).

வாழ்த்துக்கள் தோழர்களே!

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

Wednesday, February 21, 2018


பேரணியில் பங்கேற்கும் தோழர்களை 
தஞ்சை மாவட்டச் சங்கம் 
வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.












உலக தாய்மொழி தினம் 
 “தனது தாய் மொழியில் சரிவர எழுத, பேச, படிக்க, சிந்திக்க கற்றுக் கொள்ளும் ஒருவரால்தான் இதர மொழிகளை மிகச் சரியாக உச்சரித்துப் படிக்க முடியும்.  “தாய் மொழி பேசாதவனும் தந்தை வழி கேளாதவனும் வாழ்வில் வளம் பெற்றதாக வரலாறு இல்லை.
சமீபத்தில் நமது பஞ்சாப் அரசும் ஆங்கில மருத்துவ நூல்களை பஞ்சாபி மொழிக்கு மாற்றம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தாய் மொழியில் கல்லாத எந்தவொன்றும் கிணற்றில் போடப்பட்ட கல்தான். தங்கத் தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல!
மொழிப்பற்று என்பது இதர மொழிகளையும் பற்றிக் கொள்ளவே விரும்பும். “’மும்மொழி கற்றவன் மூன்று மனிதர்களுக்கு சமம்” என்பது சீன பழமொழி. தாய் மொழிப் பற்று கட்டாயம் இருக்க வேண்டும். அதே வேளை வேற்று மொழிகளைத் தூற்றுவது மொழிப் பற்றின் முகவரியல்ல; அது மொழி வெறியின் முதல் அடையாளம்.
     ஒவ்வொரு மொழியும் ஏதோ ஒரு வகையில் சிறப்புக்குரியவைதான். எழுத்தற்ற மொழியும் மொழிதானே! ஆனால் இன்றைக்கு ஒரு மொழி அது என்ன செய்து விடும் என்று வெகு சாதாரணமாக இருந்து விட முடியாது.
சர்வதேசமெங்கும் “மொழிப் போர்” முன்மொழியப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மொழி யுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாய் பரிமாணமும், பரிணாமமும் பெற்றிருப்பது பெரும் வேதனைக்குரியதே! இன்றைய சமஸ்கிருத மொழித்திணிப்பும் ஒரு கணம் நம் கண்முன் கொண்டு வர வேண்டிய ஒன்று.
     முதன் முதலாக மொழிப் போர் இன்றைய வங்கதேசமான கிழக்கு பாகிஸ்தானிலிருந்துதான் தொடங்கியது. தமது தேசத்தின் மொழியாக வங்காளம் வளர வேண்டும் என்பதை முன்னிறுத்தி டாக்கா பலகலைக் கழக மாணவர்கள் கலகத்தில் ஈடுபட்டு அதிரடிக் காவலர்களின் அடக்கு முறைக்கு ஆளாகி நான்கு மாணவர்கள் உயிரிழந்தார்கள். இது நடந்தது 1952 பிப்ரவரி 21.
பாரம்பரியங்களின் பாதுகாப்பு மையமான யுனெஸ்கோ பிப்ரவரி 21 ஐ சர்வதேச தாய்மொழி தினமாக 1999 இல் அறிவிக்க அது கடந்த 2000 முதல் சர்வதேசமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    நமது தாய்மொழி கண்  போன்றது, இதர மொழிகள் கண் கண்ணாடி போன்றது, கண்ணாடிகளை மாற்றலாம். கண்களை மாற்ற முடியுமா? இன்றைக்கு நாம் நமது தாய் மொழியான தமிழ்மொழியில் எப்படி இருக்கிறோம்...? வெளியே சொல்வதற்கு கூட வெட்கமாக இருக்கிறது, இருந்தாலும் சொல்லிக் கொள்கிறோம், நாமும் தமிழர் என்று. சென்னை கூவத்திற்கு மட்டுமல்ல தங்கலீஷுக்கு பிரபலமான ஒன்றே! ஆங்கில மோகம் நம் நாவுகளை ஆட்டிப் படைக்கிறது, தமிழோ தலை குனிந்து கொள்கிறது, கூடவே தமிழனும்...
      தனிமை மிகு தமிழ் தொன்னூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் பத்து ஆயிரம் கோடி மக்களால் பேசப்படுகிறது. உலகப் பழம் பெரும் ஏழு மொழிகளில் தமிழும் ஒன்று. ஆங்கிலம் தோன்றி 500 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் முத்தமிழுக்கு வயதோ 3500. கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன் எழுந்ததற்கான எழில் தமிழின் கல்வெட்டுக்கள் எகிப்தில் என்றைக்கோ கண்டெடுக்கப்பட்டுவிட்டன. இது மொழிப் பரவலை முன்னிறுத்து கிறதல்லவா?
சுமார் 30 உலகளாவிய மொழிகளுக்கு தமிழ்தான் தாய் என்பார் திரு ஜான் சாமுவேல் என்ற தமிழறிஞர். உலக அளவில் தமிழ் 18 ஆம் இடத்தில் இருப்பது சற்று பெருமைக்குரிய விசயமே! மலையாளத்திற்கு 29 ஆம் இடம். இந்தி 04 ஆம் இடத்தில் இருப்பதையும் நாம் மிகவும் கூர்ந்து கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். அச்சு மொழி, வலைமொழி என்று வரும் போது இதன் தரப்பட்டியல் வரிசை எண் நிச்சயம் மாறுபடலாம்.
     பிரபல விக்கிப்பீடியாவின் தேடல் அடிப்படையில் இந்தி 40 ஆம் இடத்திலும் தமிழ் 61 ஆம் இடத்திலும் இருக்கிறது என்பது கவனத்திற்குரியதே. “தமிழ் இனி மெல்லச் சாகும்” என்பார் பாரதி, அது தமிழகத்திற்கு நன்கு பொருந்தும் எனலாம். ஆம் சுய உரையாடல்களுக்கு அடுத்தபடியாக அவர்கள் அதிகம் செவியுறுவது “சீரியல் (நாடகத்)தமிழ்” தான். இதை “தொலைத் தமிழ்” என்றும் அன்புடன் அழைக்கலாம். இந்தியத் தொலைக் காட்சிகளில் முதன் முறையாக… என்று சொல்லும் போது “தமிழைக் கொன்றதும், கொச்சைப்படுத்தியதும் நாங்கள்தான்” என்பதையும் கூடவே சேர்த்துக் கொள்ளலாம்.
   நாம் அத்திப்பட்டியில் இருக்கிறோமோ இல்லை ஆஸ்திரேலியாவில் இருக்கிறோமோ என்று தெரியவில்லை. ஏனெனில் இன்றைய இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியவில்லை. ஏனெனில். ஏதோ ஆங்காங்கே ஒரு சிலர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் தமிழ் பேசுவதால் இன்றைய தலைமுறை திக்கித் திணறி தமிழ் பேசிக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட தாத்தாக்களும் பாட்டிகளும் வாழும் வரை தமிழ் வாழும் என்று நம்பலாம்!
சமீப காலங்களாக பெருகி வரும் “முதியோர் இல்லங்கள்” அந்த நம்பிக்கையையும் முறித்துப் போட்டு விட்டது. இந்திக்கும் இங்கிலீசுக்கும் கொண்டாட்டம்தான். “தமிழ் வீழாது வீறு கொண்டு எழும்” என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான், என்றாலும் தமிழர்களின் அபார வளர்ச்சி அவர்களது தாய் மொழியை வளப்படுத்துவதின் வழியேதான், இதர மொழிகளிலும் புலமை பெற முடியும் என்பதையும் கூடவே உணர்ந்து கொள்ள வேண்டும்.
தொன்னூறுகளில் சென்னைத் தொலைக் காட்சியில் “ஜுனூன்” என்றொரு இந்தி நாடகம் தமிழ் பெயர்ப்பு செய்து ஒளிபரப்பப்பட்டது. கேட்பதற்கே இன்னும் இரண்டு காதுகள் வேண்டும், அப்படி ஒரு கொடுந்தமிழ் அது. நாளடைவில் அந்நாடக மொழி மக்களின் மனங்களிலிருந்து நாவின் வழியே நடனமாடத் தொடங்கிய போது அது “ஜுனூன் தமிழ்” என்று பெயராக்கம் பெற்றது. ஒரு வகையில் அப்பெயர் மிகப் பொருத்தம் என்றே தோன்றுகிறது.
ஜுனூன் என்ற அரபுச் சொல்லுக்கு “பைத்தியம்” என்று பொருள், அதை பைத்தியத் தமிழ் என்று நமது பைந்தமிழில் சொல்லலாம். கொஞ்சம் ஓவராக உளறுபவர்களை (ஓவர் என்பது என்றைக்கோ தமிழ்ச் சொல்லாகிப் போய் விட்டது. அதை நீங்கள் ஆங்கிலச் சொல் என்று எண்ணினால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு) புத்தி கெட்டவன், பைத்தியக்காரன், புத்திசுவாதீனம் இல்லாதாவன் என்றெல்லாம் சொல்வதுண்டு.
    ஒரு ஜுனூன் ஒரே பாஷையில் பேசுவதில்லை, அவனுக்குள் பல்வேறு பாஷைகள் குடி கொண்டு நாவின் வழியே வெளிப்படுவதுண்டு, சிலவேளை இலக்கியமாகவும் சிலவேளை இழுக்காகவும்! மேம்பட்டவர்களை மஸ்தான், முனிவர், சித்தர், மகான் என்றெல்லாம் அழைப்பதுண்டு. அந்த வகையில் நாமும் ஒரு வகை மகான்கள்தான். ஏனெனில் ஒரு ஐந்து நிமிடத்தில் நம்முடைய பன்மொழித் திறன் நமது பேச்சிலும் மூச்சிலும் வெளிப்பட்டு விடுகிறதல்லவா...
தாய்மொழி, தேசிய மொழி, தொழில் மொழி இம்மூன்று ஓவ்வொருவருக்கும் வெகு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இத்துடன் ஒரு முஸ்லிமுக்கு அவனது சமய மொழியான அரபு மொழியும் கட்டாயமான ஒன்றே! அதிஷ்டவசமாக தமிழ், அரபி இவ்விரண்டிலும் மூன்று “ல, ழ, ள” க்கள் இருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. சுமார் 25 நாடுகளில் அரபு மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. ஐ.நாவின் ஐந்து மொழிகளில் அரபியும் ஒன்று. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைதி, நகல், வாரிசு, ஜாமின், அமுல், மகசூல், இனாம், வசூல், ரஷீது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அரபு மொழியின் அருட்கொடையே!
தமிழைப் போலவே நீண்ட பாரம்பர்யம் கொண்டதுதான் அரபி. நமது ஆதித் தாயின் மொழி தமிழ் என்றால், நமது ஆதித் தந்தையின் மொழி அரபி என்று அடித்துச் சொல்லலாம் என்பார் அகட விகடம் புகழ் தி.மு.அப்துல் காதிர், அது ஆய்வுக்குரிய ஒன்றுதான்.
 
    நமது இந்தியத் திருநாட்டில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசின் புள்ளி விபரம் ஒன்று விவரிக்கிறது.
     ஆறுவயது வரை குழந்தைகளால் எம் மொழியையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும், குறிப்பாக தாய் மொழியை... அந்தோ பரிதாபம் தமிழ் பிள்ளைகளுக்கு அரைவயதில் ஆங்கிலமல்லவா ஆசை ஆசையாக அள்ளித் திணிக்கப்படுகிறது பிறகு அவர்கள் மேலைக் கலாச்சாரத்தோடு வளராமல் இந்தியக் கலாச்சாரத்தில் வேஷ்டியும் சேலையும் கட்டிக் கொண்டா வளரும்...?
வாருங்கள்!
சேய் மொழிகளை போற்றி வளர்ப்போம்
தாய் மொழிகளை காப்பாற்றுவோம்.

Tuesday, February 20, 2018

 வாழ்க மணமக்கள்!

தஞ்சை தோழர் K. பிச்சையா அவர்களின் 
மகள் திருமண விழா  தஞ்சையில் சிறப்பாக நடைபெற்றது. 

நமது  முதன்மைப் பொது மேலாளர்
திரு. C.V. வினோத் அவர்கள் 
பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
தோழர்கள் K. கிள்ளிவளவன், S. சிவசிதம்பரம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்துச் சங்க தலைவர்கள், தோழர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 



Sunday, February 18, 2018

 வாழ்க மணமக்கள்!

தஞ்சை தோழர் மனோகரன் TT அவர்களின் மகன் திருமண விழா சிறப்பாக தஞ்சையில் நடைபெற்றது. தோழர்கள். கிள்ளிவளவன், கலைச்செல்வன், ஜோதிவேல், சரவணன், கண்ணன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். 



Saturday, February 17, 2018

வெல்லட்டும்!        வெல்லட்டும்!!
முற்றுகைப் போர் வெல்லட்டும்! 

Friday, February 16, 2018



நமது BSNL ன் நஷ்டம் மற்றும் நிதிப் பற்றாக்குறை 
இவைகளை காரணம் காட்டி, ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளப்  பட்டுவாடாவிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாகம் மறுத்து வருகிறது.
இதனால் இரண்டு மாதமாக சம்பளம் வராமல் தோழர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.
இப்போது அந்தப் பிரச்சினை  சரி செய்யப்பட்டுவிட்டது. 

நமது மாவட்டத்தில் NFTE மற்றும் BSNLEU இணைந்து 
இன்று மாவட்ட நிர்வாகத்தைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அதனடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள்
 இன்று 16-02-2018 ஒருமனதாக எட்டப்பட்டது. 
=====================================
முடிவுகள்:
 01-01-2017 முதல் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் 
நிறுத்தி வைக்கப்படுகிறார்கள்.

முன்னாள் ராணுவத்தினர்கள்  அனைவரும் 
பணியிலிருந்து நிறுத்தப்படுகிறார்கள்.

இந்த ஆட்குறைப்பு நிகழ்வு 28-02-2018
அன்று நடைபெறும்.

வேறு வழியில்லாத சூழ்நிலைமையில் 
இந்த முடிவினை எடுக்க வேண்டிய 
கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டோம்! 
பொறுத்தருள வேண்டுகிறோம்!

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்  -  டி. கலைச்செல்வன்,
மாவட்டச் செயலர்கள்.


NFTE -  BSNL

தமிழ் மாநில  தொலைத்தொடர்பு 
ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், 
தஞ்சை மாவட்டம்.
முந்தாநாள் சிதம்பரத்தில் சிறப்புக் கூட்டம்.
நேற்று CGM மிடம் பேச்சு வார்த்தை 
இன்று பட்டுவாடாவிற்கு உத்தரவு ....
நாங்கள்ளாம்......................
சே,சே,  நம்மள நாமே சொல்லிக்கக் கூடாது.
=============================================================
 நேற்று 15-02-2018 நமது மாநிலச் செயலர்கள் 
தோழர். செல்வம் மற்றும் நடராஜன் 
ஆகியோர் CGM அவர்களை சந்தித்து 
பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அதனடிப்படையில் 02-02-2018  ம் தேதி வரையில்
 நமது  CGM  அலுவலகத்திற்கு வந்த அனைத்து பில்களுக்கும் நிதி ஓதுக்கப்பட்டுவிட்டது.
 ஒப்பந்த ஊழியர்களுக்கு விரைந்து 
ஊதிய பட்டுவாடா செய்ய நிர்வாகம்  உத்திரவிட்டுள்ளது. இன்னும் இரண்டொரு நாட்களில்  அனைத்து மட்டங்களுக்கும் 
பேமெண்ட் ஆகிவிடும்.
 தொடர் முயற்சி எடுத்திட்ட  
மாநில சங்கத்திற்கு நன்றி.

வாழ்த்துக்கள் தோழர்களே!
அன்புடன்,
கிள்ளி, கலைச்செல்வன்.
மாவட்டச்  செயலர்கள்.




Wednesday, February 14, 2018

TMTCLU 
சிறப்புக் கூட்டம் 
சிதம்பரம் - 14-02-2018

TMTCLU மாநிலச் சங்க சிறப்புக் கூட்டம்  சிதம்பரத்தில் தோழர் சண்முகசுந்தரம், சேலம் அவர்கள் தலைமையில் காலை 10:00 மணிக்கு துவங்கியது.   அனைத்து மாநில, மாவட்டச் சங்க நிர்வாகிகள் கலந்து   கொண்டனர். தோழர்கள்.P.காமராஜ் மாநில தலைவர் NFTE, K.நடராஜன் மாநில செயலர் NFTE,  R.செல்வம் மாநில பொது செயலர் TMTCLU, M.விஜய் ஆரோக்கியராஜ் மாநில பொருளர் TMTCLU, இரா.ஸ்ரீதர்  மாவட்ட செயலர் NFTE ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நமது பகுதியிலிருந்து மாவட்டச் செயலர்கள் 
கிள்ளிவளவன், கலைச்செல்வன், 
நாடிமுத்து, சிவப்பிரகாசம் 
ஆகியோரும் பங்கேற்றனர்.
முடிவுகள்:
சம்பளப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி நிர்வாகம் நடந்துகொள்ளவில்லை.  எனவே மீண்டும் நிர்வாகத்தை சந்திப்பது, உடன் கிடைக்க வலியுறுத்துவது, இன்றேல் போராட்ட அறிவிப்பை கொடுத்து 
உடனேயே களத்தில் இறங்குவது.

மாநில மாநாட்டை குடந்தையில்  நடத்துவது.

ஆட்குறைப்பு பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது.
















Sunday, February 11, 2018



நமது முன்னாள் மாவட்டப் பொருளாளர் 
திருத்துறைப்பூண்டி 
தோழர். T. பக்கிரிசாமி அவர்களின் 
மகன் திருமண விழா 
இன்று 11-02-2018 காலை 
திருத்துறைப்பூண்டி 
அங்கை திருமண மஹாலில் 
வெகு சிறப்பாக நடைபெற்றது.  

மாவட்டச் செயலர் தோழர் கிள்ளிவளவன், 
மாவட்டப் பொருளர் தோழர். சேகர், 
ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் 
தோழர் சாமிநாதன் 
ஆகியோருடன் தோழர்கள் பலரும் 
பங்கேற்று வாழ்த்தினர்.







செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR